செய்திகள்
சச்சின் தெண்டுல்கர், கேரி கிர்ஸ்டன்

தெண்டுல்கர் 2007-ல் கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்பினார்: கேரி கிர்ஸ்டன்

Published On 2020-06-18 09:52 GMT   |   Update On 2020-06-18 09:52 GMT
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் 2007-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்பினார் என்று முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
1989-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த சச்சின் தெண்டுல்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் 200 டெஸ்டில் ஆடி 51 சதம் உள்பட 15,921 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் விளையாடி 49 சதம் உள்பட 18,426 ரன்னும் குவித்துள்ளார். ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் ஆடி இருக்கிறார்.

ஒருநாள் போட்டியில் சிறந்த தொடக்க வீரராக உருவெடுத்த தெண்டுல்கர் எண்ணற்ற சாதனைகளை படைத்தார். ஆனால் 2007-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிடில் வரிசையில் விளையாட தெண்டுல்கருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் (ஆஸ்திரேலியா) ஆலோசனையின் பேரில் செய்யப்பட்ட இந்த பேட்டிங் வரிசை மாற்றம் தெண்டுல்கருக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி லீக் ஆட்டங்களில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளிடம் மோசமாக தோற்று தொடக்க சுற்றுடன் வெளியேறியது. அந்த போட்டியுடன் கிரேக் சேப்பலின் பயிற்சியாளர் பதவியும் காலியானது.

கிரேக் சேப்பல் வெளியேறிய பிறகு 3 ஆண்டு காலம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் (தென்ஆப்பிரிக்கா), பேட்டிங் வரிசை மாற்றத்தால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 2007-ம் ஆண்டில் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து விலக நினைத்ததாக தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிர்ஸ்டன் சமூக வலைதளத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை நான் ஏற்க வந்த தருணத்தில் தெண்டுல்கர் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலக விரும்பினார். தனக்கு பொருத்தமான பேட்டிங் வரிசையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் ஓய்வு பெற நினைப்பதாக நான் அறிந்தேன்.



பிறகு அவர் விரும்பிய வரிசையில் (தொடக்க ஆட்டக்காரர்) விளையாட திரும்பிய அடுத்த 3 ஆண்டு காலத்தில் 18 சர்வதேச சதங்களை அடித்து அசத்தினார். அத்துடன் நாங்கள் 2011-ம் ஆண்டு உலக கோப்பையையும் வென்றோம். இந்திய அணியினுடனான எனது பயிற்சி பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. வீரர்கள் சவுகரியமாகவும், சிறப்பாகவும் செயல்படுவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும் பணியை நான் சரியாக கவனித்தேன்’’ என்றார்.
Tags:    

Similar News