செய்திகள்
வீராங்கனை கோமதி

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரம்: தமிழக தடகள வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டு தடை

Published On 2020-06-09 15:27 IST   |   Update On 2020-06-09 15:27:00 IST
இந்தியாவின் 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனையான கோமதிக்கு ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி தடகள வீராங்கனைகளில் ஒருவர் கோமதி. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

30 வயதான கோமதி பந்தய தூரத்தை 2 நிமிடம் 2.70 வினாடிகளில் கடந்து முதல் இடத்தைப் பிடித்து முத்திரை பதித்தார். இதற்கிடையே அவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தடை செய்யப்பட்ட ஸ்டிராய்ட் வகை ஊக்க மருந்து உட்கொண்டது பரிசோதனையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் ஊக்கமருத்து தொடர்பாக கோமதிக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடகள ஒருமைப்பாடு பிரிவான ஏ.ஐ.யூ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். 2023-ம் ஆண்டு மே 16-ம் தேதி வரை கோமதியின் தடை இருக்கும். அதுவரை அவர் எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாது.

அதோடு ஆசிய தடகள போட்டியில் கோமதி பெற்ற தங்கப்பதக்கமும் பறிக்கப்படுகிறது. ஏற்கனவே அவரது ‘ஏ’
சாம்பிள் பரிசோதனை உறுதி செய்யப்பட்டது. தற்போது ‘பி’ சாம்பிளிலும் உறுதியாகி உள்ளது. கோமதிக்கு நடத்தப்பட்ட 4 பரிசோதனையிலும் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் 18-ந்தேதி முதல் மே-17 வரையிலான கோமதியின் அனைத்து போட்டி முடிவுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அவர் பெற்ற பதக்கங்கள், பட்டங்கள், தரவரிசை புள்ளிகள் பரிசு தொகை, போட்டியில் பங்கேற்ற பணம் ஆகியவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகிறது.

மேலும் வழக்கு மற்றும் இதர செலவுகளுக்காக கோமதிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 28 நாட்களுக்குள் அவர் செலுத்த வேண்டும் என்று ஏ.ஐ.யூ உத்தரவிட்டுள்ளது.

எதிர்த்து கோமதி விளையாட்டு தீர்ப்பாய கோர்ட்டில் அப்பீல் செய்யலாம். இது அவருக்கான கடைசி வாய்ப்பாக இருக்கலாம்.

Similar News