செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணி (பழைய படம்)

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி

Published On 2020-05-31 09:10 GMT   |   Update On 2020-05-31 09:10 GMT
ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதத்தில் (ஜூன்) இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக இந்த போட்டித் தொடர் தள்ளிவைக்கப்பட்டது.

தள்ளிபோடப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி தொடரை ஜூலை மாதத்தில் நடத்துவது குறித்து இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியங்கள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்புக்கான உரிய மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி தொடரை நடத்தலாம் என்று இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவுக்கு வந்துள்ளன.

இங்கிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகள் சவுதம்டன் மற்றும் மான்செஸ்டரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவது டெஸ்ட் ஜூலை 8-ந்தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 16-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 24-ந்தேதியும் தொடங்குகிறது. போட்டி தொடருக்கு முன்னதாக வீரர்களை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால் இந்த போட்டிக்காக வெஸ்ட்இண்டீஸ் அணி வருகிற 8-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறது.

இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் குறித்து வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கொள்கை ரீதியாக அனுமதி அளித்துள்ளது. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய மருத்துவம் மற்றும் கிரிக்கெட் தொடர்பான பிரதிநிதிகள், ஆலோசகர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய மருத்துவம் மற்றும் பொது சுகாதார ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகம், எங்கள் நாட்டில் உள்ள பல்வேறு அரசுகளிடம் இருந்து வீரர்கள், அணியின் உதவியாளர்கள் இடம் பெயர்தல் மற்றும் அவர்களுக்கான தனி விமான பயணம், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றுக்கான அனுமதிகளை பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூட்டிய ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின்போது வீரர்கள் மற்றும் அணியினருக்கு அளிக்கப்படும் மருத்துவ பாதுகாப்பு அம்சங்கள் குறித்த திட்டங்கள் எங்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டது. அது குறித்து நாங்கள் முழுமையாக ஆய்வு செய்து விட்டோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News