செய்திகள்
ஐசிசி

டி20 உலக கோப்பை குறித்து ஜூன் 10-ந்தேதி முடிவு: ஐசிசி

Published On 2020-05-29 10:31 GMT   |   Update On 2020-05-30 15:32 GMT
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை குறித்து ஜூன் 10-ந்தேதி முடிவு செய்யப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகமான சூழ்நிலை ஏற்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐ.சி.சி.யின் போர்டு நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது.

ஐ.சி.சி. தலைவர் ‌ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த காணொலி கூட்டத்தில் மொத்தம் 18 பேர் கலந்து கொண்டனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அதன் தலைவர் கங்குலி பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை 2 ஆண்டுக்கு தள்ளி வைக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் ஐ.சி.சி. இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்காமல் தள்ளி வைத்தது.

20 ஓவர் உலக கோப்பை மற்றும் பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக அடுத்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐ.சி.சி.யின் கூட்டத்தில் அதன் ரகசியத் தன்மை மீறப்படுவதாக பல வாரிய உறுப்பினர்கள் கவலை எழுப்பினர். ஐ.சி.சி. வாரிய விவகாரங்களின் புனிதத் தன்மையும், ரகசிய தன்மையும் மிக உயர்ந்த ஆளுமைக்கு ஏற்ப உறுதி செய்வதற்கு உடனடி கவனம் தேவை என்று உணரப்பட்டது.

இது தொடர்பாக ஐ.சி.சி நெறிமுறை அதிகாரி தலைமையில் சுதந்திரமான விசாரணையை தொடங்குவது என்று ஒருமனதாக உடன்பாடு செய்யப்பட்டது. ஜூன் 10-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அனைத்து வி‌ஷயங்கள் குறித்தும் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள கிரிக்கெட் போட்டி பாதிப்பு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நிலை, மறு திட்டமிடல் உள்பட அனைத்து விவாதங்களும் இந்தக் கூட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பி.சி.சி.ஐ.-யால் வரிவிலக்கு பெற முடியாத திறமையின்மை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வரிவிலக்கு இல்லை என்றால் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை (2021) இந்தியாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவோம் என்று ஐ.சி.சி. ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) பொருளாளர் அருண் துமல் கூறியதாவது:-

இதில் அச்சப்பட எதுவுமில்லை. நான் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். ஐ.சி.சி. மற்றும் மத்திய அரசிடம் எங்களது குழு தொடர்ந்து இணைப்பில் இருப்பதால் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News