செய்திகள்
ஸ்டீவ் வாக், ஷேன் வார்னே

சுயநலவாதி கிரிக்கெட்டர் யார்?: வார்னேவின் குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாக் பதில்

Published On 2020-05-21 09:09 GMT   |   Update On 2020-05-21 09:09 GMT
வார்னேயின் குற்றச்சாட்டு அவரையே பிரதிபலிக்கிறது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்-அவுட்டில் தொடர்புடைய வீரர்களின் பட்டியலை ‘கிரிக்இன்போ’ இணையதளம் சமீபத்தில் வெளியிட்டது.

இதில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் முதலிடத்தில் உள்ளார். அவர் பேட்டிங் செய்யும்போது ஏற்பட்ட ரன்-அவுட் நிகழ்வு மொத்தம் 104. இதில் அவரே ரன்-அவுட்டில் வீழ்ந்தது 31 முறை. எதிர்முனையில் நின்ற சக பேட்ஸ்மேன்கள் ரன்-அவுட் ஆனது 73 தடவை.

இந்த பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் 2-வது இடத்திலும் (ரன் அவுட்டில் தொடர்பு 101), சச்சின் தெண்டுல்கர் 3-வது இடத்திலும் (98) உள்ளனர்.

இந்த புள்ளி விவரத்தை சுட்டிகாட்டி பேசிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, ‘‘ஸ்டீவ் வாக்கை நான் வெறுக்கவில்லை. எனது கணிப்பில் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய சிறந்த அணியில் அவரையும் தேர்வு செய்திருந்தேன். ஆனால் என்னுடன் விளையாடிய வீரர்களில் ஸ்டீவ் வாக்கை விட சுயநலம் கொண்டவர் யாரும் கிடையாது. புள்ளி விவரங்களே அதற்கு சாட்சி. இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன்’’ என்றார்.



அவரது குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாக் இப்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘மக்கள் இதை தொன்றுதொட்டு வரும் நீண்ட கால பகை என்று பேசிக்கொள்கிறார்கள். என்னை பொறுத்தவரை இது இரு நபர்களுக்கு இடையே உள்ள பகை மட்டுமே. அதிலும் நான் ஒருபோதும் வில்லங்கத்தை கொண்டு வந்ததில்லை. அதனால் இது ஒரு நபர் சார்ந்த விஷயம்தான். வார்னேவின் கருத்துகள் அவரை பற்றிதான் பிரதிபலிக்கிறது. மற்றபடி இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை’’ என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது ஸ்டீவ் வாக் கேப்டனாக இருந்தார். அப்போது ஷேன் வார்னேயை போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கினார். அதில் இருந்து இருவருக்கும் இடையில் இதுபோன்று வார்த்தை போர் ஏற்பட்டு வருகிறது.
Tags:    

Similar News