செய்திகள்
மூன்று உலக கோப்பைகளை வெல்ல முடியாததற்கு வாசிம் அக்ரம்தான் காரணம்: அமிர் சோஹைல் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் அணி 1996, 1999, 2003 உலக கோப்பைகளை வெல்லக் கூடாது என்ற நிலையை உருவாக்கியவர் வாசிம் அக்ரம் என அமிர் சோஹைல் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த தொடக்க பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் அமிர் சோஹைல். 1992-ம் ஆண்டு இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வெல்லும்போது தொடக்க வீரராக களம் இறங்கியவர். அதேபோல் பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் வாசிம் அக்ரம். இவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். உலக கோப்பை இறுதிப் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அணி வெற்றி பெற காரணமாக இருந்தார்.
இந்நிலையில் 1992-க்குப் பிறகு பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வெல்லக்கூடாது என்பதை உருவாக்கியவர் வாசிம் அக்ரம் என அமிர் சோஹைல் குற்றம்சாட்டியுள்ளார்.
வாசிம் அக்ரம் குறித்து அமிர் சோஹைல் கூறுகையில் ‘‘இது மிகவும் எளிது. ஒருபக்கம் 1992 உலக கோப்பையை வைத்துவிட்டு, 1996-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை பற்றி பேசலாம். 1995-ல் ரமீஸ் ராஜா கேப்டனாக இருந்தார். அதற்கு முன் சலீம் மாலிக் கேப்டனாக இருந்தார். அவர் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்தார். அவர் இன்னும் ஒரு வருடம் கேப்டனாக இருந்திருந்தால் வாசிம் அக்ரமால் கேப்டனாகியிருக்க முடியாது.
2003 வரை என்ன நடந்தது என்று நீங்கள் உற்று நோக்கினால், ஒவ்வொரு உலக கோப்பைக்கும் முன் கேப்டன்கள் நீக்கப்பட்டிருப்பார்கள் என்பது தெரிந்து கொள்ளலாம். அதில் வாசிம் அக்ரம் முக்கிய பங்காற்றியிருப்பார்.
பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்த வாசிம் அக்ரம், 1992-ம் ஆண்டுக்குப்பின் உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லாமல் இருப்பதை உருவாக்கினார். அக்ரம் பாகிஸ்தானுக்காக நேர்மையாக இருந்திருந்தால், 1996, 1999 மற்றும் 2003 உலக கோப்பைகளை வென்றிருக்கலாம்.
இந்த காரணத்திற்காகத்தான் அனைத்து நாடகமும் நடந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இதற்கெல்லாம் பின்னால் உள்ள குற்றவாளியை முன்னணியில் கொண்டு வரவேண்டும்’’ என்றார்.