செய்திகள்
ரசிகர்கள் என்னை சில்வர் சிந்து என்று அழைப்பதை விரும்பவில்லை: பிவி சிந்து
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து இறுதி போட்டியில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் என்கிறார்.
இந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து சமூகவலைத்தளம் மூலம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இறுதி ஆட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றேன். அதன் பிறகு மற்ற போட்டிகளில் 6-7 வெள்ளிப்பதக்கங்களை பெற்றேன். இதனால் மக்கள் என்னிடம் சிந்துவுக்கு இறுதிப்போட்டி என்றாலே பயம் வந்து விடுகிறது என்று பேசத் தொடங்கினர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தேன். ஏற்கனவே உலக போட்டியில் 2 வெள்ளி, 2 வெண்கலம் கைப்பற்றி இருக்கிறேன். அதனால் இந்த முறை தோற்று விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன்.
மக்கள் என்னை (வெள்ளிப்பதக்கத்தை மனதில் வைத்து) சில்வர் சிந்து என்று அழைப்பதை விரும்பவில்லை. அதனால் களத்தில் 100 சதவீதம் எனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது. அதன்படியே சிறப்பாக விளையாடி உலக சாம்பியன் ஆகி, தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினேன்.
இவ்வாறு சிந்து கூறினார்.