செய்திகள்
சவுரவ் கங்குலி

இந்தியாவில் கிரிக்கெட் போட்டி நடைபெற நீண்ட காலம் ஆகலாம்: பிசிசிஐ தலைவர் கங்குலி

Published On 2020-04-22 14:59 GMT   |   Update On 2020-04-22 14:59 GMT
கொரோனாவில் மனித உயிர்க்கு ஆபத்து என்ற நிலையில் இந்தியாவில் தற்போதைக்கு கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என கங்குலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் நுழைந்தபோது மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. கிரிக்கெட் போட்டிகள் நடத்தினால் ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

அந்த நிலையில்தான் இந்திய கிரிக்கெட் வாரியம் மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்து ஐபிஎல் 2020 சீசனை ஏப்ரல் 15-ந்தேதிக்கு தள்ளி வைத்தது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் 2020 சீசனை அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ.

தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது கட்டுக்குள் வரும் என்று சொல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கிடையே ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மனித உயிர்க்கு ஆபத்து என்ற நிலையில் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ‘‘ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் சமூக யதார்த்தத்தில் வேறுபாடு உண்டு. விரைவில் இந்தியாவில் கிரிக்கெட்டை எதிர்பார்க்க முடியாது. ஏராளமான விஷயங்கள் உள்ளன. மிகவும் முக்கியமானது, மனித உயிர்க்கு ஆபத்தான நிலை உள்ளபோது, விளையாட்டு பற்றி நான் யோசிக்கவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News