செய்திகள்
நோவக் டிஜோகோவிச்

டென்னிஸ் உலகம் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவ வேண்டும்: ஜோகோவிச் வலியுறுத்தல்

Published On 2020-04-22 11:43 GMT   |   Update On 2020-04-22 11:43 GMT
தரவரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வீரர்களுக்கு டென்னிஸ் உலகம் உதவ வேண்டும் என ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
கொரோன வைரஸ் தொற்று ஒரே நேரத்தில் உலகம் முழுவதையும் முடக்கி போட்டுள்ளது. இதனால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறாமல் உள்ளது. ஆகவே, வீரர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள்.

டென்னிஸ் போட்டியை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு தொடரிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும். அதேவேளையில் மிகவும் பின்தங்கிய தரவரிசையில் இருக்கும் வீரர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்காது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் கஷ்டப்படுவார்கள்.

ஆண்களுக்கான விளையாட்டுக்களை ஏடிபி டூர், பெண்களுக்கான போட்டிகளை டபிள்யூ.டி.ஏ,-யும் நடத்துகின்றன. மேலும் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் அந்தந்த அமைப்பாளர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் வீரர்களுக்கு நிதி வழங்கி உதவ வேண்டும் என நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோகோவிச் கூறுகையில் ‘‘நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வீரர்களுக்கு உதவி செய்யக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு முன்னணி வீரர் என்ற அந்தஸ்தை நான் பெற்றுள்ளேன். தனிப்பட்ட முறையில் டென்னிஸ் நடைபெறாவிட்டாலும் பல வருடங்கள் வாழக்கூடிய அளவிற்கு என்னிடம் போதுமான பணம் உள்ளது.

வீரர்கள் தனிப்பட்ட முறையில் அவர்கள் எவ்வளவு விரும்புகிறார்களோ, அதை வழங்க முடியும். வீரர்கள் எந்த தரவரிசையில் இருந்தாலும் பணம் கொடுங்கள் என்று கூறுவது கடினம். மாறுபட்ட கருத்துக்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டென்னிஸ் போட்டியை விரும்பும் எல்லோரையும் டென்னிசை காப்பாற்றுவதற்காக நிதி அளிக்க வேண்டும் என அழைக்கிறேன்.

வீரர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒற்றுமையை இந்த நேரத்தில் காட்ட வேண்டும். அதேபோல் கீழ்மட்டத்தில் உள்ள வீரர்களை மறக்கவில்லை என்பதையும் காட்ட வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News