செய்திகள்
டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்துக்கான புதிய தேதி அறிவிப்பு
சைக்கிள் பந்தயங்களில் பிரபலமான டூர் டி பிரான்ஸ் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ்:
சைக்கிள் பந்தயங்களில் பிரபலமான டூர் டி பிரான்ஸ் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 27-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஜூலை மாதத்தின் பிற்பகுதி வரை பிரான்ஸ் அதிபர் தடை விதித்துள்ளார். அதை மனதில் கொண்டு ஆலோசித்த போட்டி அமைப்பாளர்கள், டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் ஆகஸ்டு 29-ந்தேதி முதல் செப்டம்பர் 20-ந்தேதி வரை நடைபெறும் என்று நேற்று அறிவித்தனர்.
புதிய தேதி அறிவிப்பு, தொழில்முறை சைக்கிள் பந்தய வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் உற்சாகம் அளித்துள்ளது. பிரான்சின் நைஸ் நகரில் தொடங்கி பாரீசில் போட்டி நிறைவடையும். மொத்தம் 21 கட்டமாக 3,470 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். மலைப்பாதை, கரடுமுரடான பாதை, பிரதான சாலைகளில் மின்னல் வேகத்தில் சைக்கிளில் வீரர்கள் சீறிப்பாய்வார்கள். 3 வார காலம் நடக்கும் இந்த போட்டியை சாலையின் இருபுறமும் நின்றபடி ஒரு கோடி மக்களுக்கு மேல் கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.