செய்திகள்
ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2020-03-13 15:12 IST   |   Update On 2020-03-13 15:12:00 IST
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதை இந்திய அரசும், மாநில அரசுகளும் கடைபிடிக்க தொடங்கியுள்ளன.

முதற்கட்டமாக டெல்லி அரசு திரையரங்குகள், நீச்சல் குளங்கள் போன்றவற்றை மூடியது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கும் அனுமதி அளிக்க இயலாது என்று தெரிவித்தது.

இதற்கிடையில் மத்திய அரசு ஏப்ரல 15-ந்தேதி வரை விசாக்களுக்கு தடைவிதித்துள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐசிசி இதை டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளது.

Similar News