செய்திகள்
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 347 ரன்கள் குவித்து டிக்ளேர்
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் வங்காளதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
கொல்கத்தா:
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியா வங்காளதேச அணிகளிடையே கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்காளதேச அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்னில் சுருண்டது.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். அகர்வால் 14 ரன்னிலும், ரோகித் சர்மா 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த புஜாராவும் கேப்டன் விராட் கோலியும் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தனர். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 59 ரன்னும், ரகானே 23 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ரகானேவும் கோலியும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரகானே 51 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் தனது 27வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி 136 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். வங்காளதேச அணியை விட இந்திய அணி 241 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து, வங்காளதேச அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.