செய்திகள்
ரகானே - புஜாரா

பகல்-இரவு டெஸ்டில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம் - புஜாரா

Published On 2019-11-12 07:10 GMT   |   Update On 2019-11-12 07:10 GMT
வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் விளையாட ஆர்வமாக இருப்பதாக இந்திய அணி வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்தூர்:

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அடுத்து இரு அணிகள் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி இந்தூரில் தொடங்குகிறது.

2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஆட்டம் பகல்-இரவு டெஸ்டாக நடத்தப்படுகிறது. இதில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய அணி முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இப்போட்டி குறித்து இந்திய அணி வீரர் புஜாரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்தில் விளையாடும் போது பெரிய வித்தியாசம் இருக்கும் என்று நான் கருதவில்லை. நான் எஸ்.ஜி.பிங்க் நிற பந்துகளுக்கு எதிராக விளையாடியதில்லை.

ஆனால் எனது கணிப்புக்கு எஸ்.ஜி. பிங்க் நிற பந்துகள் டெஸ்டில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பந்துகள் போல்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் எஸ்.ஜி.பிங்க் நிற பந்துகளின் தரம் மேம்பட்டுள்ளதாக கருதுகிறேன்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பந்துகளின் தரம் மற்றும் பந்து வடிவத்தை பராமரித்த விதம் ஆகியவற்றில் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. அதுபோல் பிங்க் நிற பந்துகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

சிவப்பு நிற பந்தில் இருந்து பிங்க் நிற பந்தில் சிறிய வித்தியாசம் இருக்கும். ஆனால் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது.

இருள் சூழ்ந்த நேரத்தில் பிங்க் நிற பந்தில் விளையாடுவதில் சவால்கள் இருக்கும். இதற்கு உங்களுக்கு இன்னும் கூடுதலாக பயிற்சி தேவைப்படும்.

பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்காக காத்து கொண்டு இருக்கிறோம். அதில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். அந்த சமயத்தில் சிறந்த அனுபவமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News