செய்திகள்
சையத் முஷ்டாக் அலி டிராபி

சையத் முஷ்டாக் அலி டிராபி: உ.பி.யிடம் வீழ்ந்தது தமிழ்நாடு

Published On 2019-11-11 14:52 GMT   |   Update On 2019-11-11 14:52 GMT
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் தமிழ்நாடு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் உத்தர பிரதேச அணி வீழ்த்தியது.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் தமிழ்நாடு அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உத்தர பிரதேசம் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற உத்தர பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணியின் முரளி விஜய் - என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஜெகதீசன் 2 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விஜய் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் 42 பந்தில் 51 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 41 பந்தில் 61 ரன்கள் சேர்த்தார். விஜய் சங்கர் 14 பந்தில் 28 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உத்தர பிரதேச அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் உபேந்த்ரா யாதவ் ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 70 ரன்கள் அடிக்க 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியின் மூலம் தமிழ்நாடு குரூப் ‘பி’-யில் 2-வது இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News