செய்திகள்
டி 20 போட்டியில் அதிக ரன்கள் - கோலியை முந்தி சாதனை படைப்பாரா ரோகித் சர்மா?
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில், விராட் கோலியை முந்தி ரோகித் சர்மா சாதனை படைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியா மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
இதற்காக, இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா நேற்று சக வீரர்களுடன் இணைந்து வலைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வலுவாக எறிந்த ஒரு பந்து ரோகித் சர்மாவின் இடது தொடையில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியதால் பயிற்சியை பாதியில் கைவிட்டு வெளியேறி சிகிச்சை பெற்றார்.
அவரது காயத்தன்மையை பரிசோதித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு, அவர் உடல்தகுதியுடன் இருப்பதாகவும், முதல் ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவித்தது.
இந்நிலையில், வங்காளதேசத்துக்கு எதிராக நாளை நடைபெறும் முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில், விராட் கோலியை முந்தி ரோகித் சர்மா அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்திய கேப்டன் விராட் கோலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 67 போட்டிகளில் விளையாடி 2,450 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து, ரோகித் சர்மா 90 போட்டிகளில் விளையாடி 2443 ரன்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.
நாளை நடக்கும் போட்டியில் ரோகித் சர்மா 8 ரன்கள் எடுத்தால், விராட் கோலியின் சாதனையை முறியடித்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.