செய்திகள்
கிறிஸ்டியானோ ரொனால்டோ

சாதனைகள் என்னை நோக்கி வரும்: 700 கோல்கள் அடித்து சரித்திரம் படைத்த ரொனால்டோ சொல்கிறார்

Published On 2019-10-15 14:53 GMT   |   Update On 2019-10-15 14:53 GMT
கால்பந்து வாழ்க்கையில் 700-வது கோலை பதிவு செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாதனை என்னை நோக்கி வரும் எனத் தெரிவித்துள்ளார்.
கால்பந்து போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்பவர் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. நேற்று உக்ரைனுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த கோல் மூலம் கால்பந்து வாழ்க்கையில் தனது 700-வது கோலை பதிவு செய்து சாதனைப் படைத்தார்.

உலகளவில் 700-வது கோல் அடித்த 7-வது வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சாதனைப் குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘சாதனைகள் வருவது வழக்கமானது. நான் அதை எதிர்பார்த்து இருப்பதில்லை. அது என்னை நோக்கி வரும்.

அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் இல்லாமல் இந்த சாதனையை எட்ட இயலாது. அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். என்னுடைய கால்பந்து வாழ்க்கையில் இது சிறப்பானதுதான். என்றாலும், உக்ரைனுக்கு எதிராக 1-2 எனத் தோல்வியடைந்ததால், கசப்பான இனிப்பு.

நாங்கள் உக்ரைனுக்கு எதிராக சிறப்பாக விளையாடினோம். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. எங்களால் எவ்வளவு முடியுமோ, அனைத்தையும் செய்தோம். எங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைத்தது’’ என்றார்.



கிறிஸ்டியானோ ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக்கில் 127 கோல்கள் அடித்துள்ளார். தனது முதல் கிளப் அணியான ஸ்போர்ட்டிங் அணிக்காக 2002-03-ல் ஐந்து கோல்கள் அடித்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 232 போட்டிகளில் 118 கோல்கள் அடித்துள்ளார்.

அதன்பின் ரியல் மாட்ரிட் அணிக்காக 438 போட்டிகளில் 450 கோல்கள் அடித்துள்ளார். தற்போது விளையாடி வரும் யுவான்டஸ் அணிக்காக 51 போட்டிகளில் 32 கோல்கள் அடித்துள்ளார். போர்ச்சுக்கல் அணிக்காக 95 கோல்கள் அடித்துள்ளார்.
Tags:    

Similar News