மற்ற அணிகளை விட இந்திய வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருக்கிறது - கபில்தேவ்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டின் முகத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மாற்றி இருக்கிறார்கள்.
இந்திய அணியில் இதுபோன்ற வேகப்பந்து தாக்குதல் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இப்படி வேகப்பந்து தாக்குதல் சிறப்பாக இருக்கும் என்றும் நினைத்ததில்லை.
தற்போது உலகிலேயே இந்திய வேகப்பந்து வீச்சு தான் சிறப்பாக இருக்கிறது. மற்ற அணிகளை விட திறமை அதிகம் உள்ளது. முகமதுஷமி, தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இல்லாமல் இருப்பது பெரிய விஷயமல்ல. அவர் அணியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பது தான் மிகவும் முக்கியமானது.
அவர் சிறப்பாக பந்துவீசுவதை பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. திறமை வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை எண்ணி பெருமை அடைகிறேன். இன்னும் நிறைய பேர் வருவார்கள்.
பல இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது திறமையை நிரூபிக்க ஐ.பி.எல். நல்ல களமாக இருக்கிறது.
வேகப்பந்து வீச்சை பலப்படுத்த நிறைய காலம் பிடிக்கும். ஆனால் தற்போது நிறைய போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை பார்ப்பது நல்ல உணர்வை அளிக்கிறது. இதற்கு காரணம் ஐ.பி.எல். போட்டிகள் தான். இதில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.