செய்திகள்

கவுண்டி போட்டிகளில் விளையாடியது உதவியாக இருக்கிறது- அஸ்வின்

Published On 2018-08-03 05:30 GMT   |   Update On 2018-08-03 05:30 GMT
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையில் 5 விக்கெட் கைப்பற்றியுள்ள அஸ்வின், கவுண்டி போட்டிகளில் விளையாடியது உதவிகரமாக இருந்தது என்றார்.#ENGvIND #1000thTest
பர்மிங்காம்:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையில் 5 விக்கெட் கைப்பற்றியுள்ள அஸ்வின், கவுண்டி போட்டிகளில் விளையாடியது எனக்கு உதவிகரமாக இருந்தது என்றார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது சமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 100 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று விளையாடினார். அபாரமாக விளையாடிய கோலி சதம் அடித்து அசத்தினார். கடைசி விக்கெட்டாக அவுட் ஆன கோலி 149 ரன் (225 பந்து, 22 பவுண்டரி ஒரு சிக்சர்) எடுத்தார்.

அவரது சதத்தால் இந்தியா 274 ரன் எடுத்தது. அடுத்து 13 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை இங்கிலாந்து விளையாடியது.


அஸ்வின் பந்தில் தொடக்க வீரர் அலிஸ்டயர் குக் ரன் எதுவும் எடுக்காமல் கிளீன் போல்டு ஆனார். முதல் இன்னிங்சிலும் குக் அஸ்வின் பந்தில் போல்டாகி இருந்தார்.

அத்துடன் 2-ம் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அப்போது இங்கிலாந்து 3.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்து இருந்தது. ஜென்னிஸ் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இதுவரை அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது-

கடந்த 1½ ஆண்டாக இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் அதிக நேரம் விளையாடி இருக்கிறேன். இங்கு வந்ததும் பந்து வீசும் கூடுதல் வேகத்துடன் வீசினால் பலன் அளிக்கும் என்பதை உணர்ந்தேன். அதற்கு ஏற்றாற்போல் பந்து வீசினேன்.

எனது பந்து வீச்சு முறையில் சிறிது மாற்றத்தை எளிமையாக செய்து வீசினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. கவுண்டி போட்டிகளில் விளையாடியது எனக்கு உதவிகரமாக இருந்தது என்றார்.  #ENGvIND #1000thTest
Tags:    

Similar News