செய்திகள்

கொழும்பு டெஸ்டிலும் இலங்கை வெற்றி- தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது

Published On 2018-07-23 09:41 GMT   |   Update On 2018-07-23 09:41 GMT
கொழும்பில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்டில் இலங்கை 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. #SLvSA
இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கடந்த 20-ந்தேதி கொழும்பு தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் குவித்தது. மகாராஜ் 9 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், அகிலா தனஞ்ஜெயா 5 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 214 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

ஒட்டுமொத்தமாக 489 ரன்கள் முன்னிலைப் பெற்றதால், தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இமாலய ஸ்கோரை சேஸிங் செய்யும் நோக்கத்தில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. டி ப்ரூயின் 45 ரன்னுடனும், பவுமா 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்னும் ஐந்து விக்கெட்டுக்கள் மட்டுமே கைவசம் இருப்பதால், 4-வது நாள் ஆட்டத்தில் விரைவில் ஆல்அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ப்ரூயின், பவுமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ப்ரூயின் அரைசதம் அடித்தார்.



இந்த ஜோடி ஹெராத், தில்ருவான் பெரேரா, தனஞ்ஜெயா சுழற்பந்தை நேர்த்தியாக எதிர்கொண்டது. இதனால் இலங்கை வீரர்கள் விரக்தியடைந்தது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் இந்த ஜோடி பிரிந்தது.

பவுமா 63 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி காக் 8 ரன்னில் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அத்துடன் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. 7 விக்கெட் வீழ்ந்ததால் இலங்கை வெற்றியை நோக்கி சென்றது.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய டி ப்ரூயின் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரபாடா 18 ரன்னிலும், ஸ்டெய்ன் 6 ரன்னிலும் வெளியேற தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.



இதனால் தென்ஆப்பிரிக்கா 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெராத் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. இலங்கை தொடக்க பேட்ஸ்மேன் கருணாரத்னே ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். 
Tags:    

Similar News