செய்திகள்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணியில் லக்மல், பிரதீப்

Published On 2018-03-02 09:47 GMT   |   Update On 2018-03-02 09:47 GMT
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர்கள் லக்மல், பிரதீப் இடம் பிடித்துள்ளனர். #NidahasTrophy#INDvSL
இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் நிதாஹாஸ் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 6-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இலங்கையில் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா - இலங்கை (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. விராட் கோலி, டோனி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை மறுதினம் கொழும்புக்கு செல்கிறது.

இந்த போட்டிக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் கேப்டன் மேத்யூஸ் விலகியதால், டெஸ்ட் கேப்டனான தினேஷ் சண்டிமல் இந்த தொடருக்கும் கேப்டனாக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டுவிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் நுவான் பிரதீப், சுரங்கா லக்மல் ஆகியோர் அணிக்கு திரும்புகிறார்கள். அதே சமயம் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வாண்டர்சே கழற்றி விடப்பட்டுள்ளனர்.



பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக அகிலா தனஞ்ஜெயா, அமிலா அபோன்சா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். காயத்தில் இருந்து மீளாத குணரத்னே பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள விவரம் வருமாறு:-

தினேஷ் சண்டிமல் (கேப்டன்), உபுல் தரங்கா, குணதிலகா, குசால் மெண்டிஸ், தசுன் ஷனகா, குசால் பெரேரா, திசாரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ், லக்மல், உதானா, அகிலா தனஞ்ஜெயா, அமிலா அபோன்சா, நுவான் பிரதீப், சமீரா, தனஞ்ஜெயா டி சில்வா. #INDvSL #INDvBAN
Tags:    

Similar News