செய்திகள்

U-17 உலகக்கோப்பை கால்பந்து: இந்தியா போராடி தோல்வி - அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது

Published On 2017-10-09 16:39 GMT   |   Update On 2017-10-09 16:39 GMT
U-17 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது.
புதுடெல்லி:

இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுடெல்லியில் இன்று மாலை இந்தியா மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. இப்போட்டியில் முதல்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதனால், இரண்டாவது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆட்டத்தின் 69 வது நிமிடத்தில் கொலம்பியா அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. இதனையடுத்து, 80 வது நிமிடத்தில் இந்தியா இந்த தொடரில் தனது முதல் கோலை அடித்தது.

சிறிது நேரத்திலேயே கொலம்பியா அணி மற்றொரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனையடுத்து, கோல் அடிக்க இந்தியா எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போனது. ஆட்ட நேர முடிவில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.

இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் அடுத்த சுற்று ஆட்டங்களுக்கு இந்தியா தகுதி பெறுவது கேள்விக்குறி ஆகியுள்ளது.
Tags:    

Similar News