செய்திகள்

ஒருநாள் போட்டியில் விரைவாக 5 சதங்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார் பாபர் ஆசம்

Published On 2017-04-10 14:15 GMT   |   Update On 2017-04-10 14:15 GMT
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 25 இன்னிங்சில் 5 சதங்கள் அடித்ததன் மூலம் குறைந்த இன்னிங்சில் 5 சதங்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருபவர் பாபர் ஆசம். 22 வயதான இளம் வீரரான இவர் உலகத்தரம் வாய்ந்த வீரராக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றபடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை 25 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் ஆசம், 1306 ரன்கள் குவித்துள்ளார். நேற்று வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் 132 பந்தில் அவுட்டாகாமல் 125 ரன்கள் சேர்த்தார். இந்த சதம் மூலம் இதுவரை ஐந்து சதங்கள் விளாசியுள்ளார்.

இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா அணியின் குயிண்டான் டி காக் 19 போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்தது உலக சாதனையாக உள்ளது. பாபர் ஆசம் 6 இன்னிங்ஸ் கூடுதலாக எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.

மேலும் 25 ஒருநாள் போட்டி இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் 1306 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்தின் ஜோனாதன் ட்ரோட் 25 இன்னிங்சில் 1280 ரன்களும், வெஸ்ட் இண்டீசின் சர் விவியன் ரிச்சார்ட்ஸ் 1211 ரன்களும், கெவின் பீட்டர்சன் 1189 ரன்களும், டி காக் 1181 ரன்களும் எடுத்துள்ளனர்.

ஐந்து சதங்களில் நான்கு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அடித்ததாகும்.

Similar News