செய்திகள்

தேதி சொல்ல முடியாது: 120 சதவீதம் உடற்தகுதியுடன் களம் இறங்குவேன்- வீராட் கோலி

Published On 2017-04-06 12:59 GMT   |   Update On 2017-04-06 12:59 GMT
காயத்தில் இருந்து மீண்டு விளையாடும் தேதியை கூற இயலாது என்றும் 120 சதவீத உடற்தகுதியுடன்தான் திரும்பி வருவேன் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியின்போது விராட் கோலியை டி.வி. வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர் பேட்டி கண்டார்.

அப்போது விராட் கோலி பேசியதாவது:-

இந்திய கிரிக்கெட்டிற்குதான் முன்னுரிமை கொடுக்கிறேன். வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை எதிர்நோக்கி இருக்கிறேன். இதனால் நான் எந்தவொரு கடின முடிவையும் எடுக்க விரும்பவில்லை. மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான எந்த தேதியையும் நான் முடிவு செய்யவில்லை. நான் 120 சதவீதம் உடற்தகுதியை பெற்ற பின்னர்தான் அணிக்கு திரும்புவேன்.  நான் முடிந்த வரை விரைவில் மைதானத்திற்கு திரும்ப விரும்புகிறேன்.

இவ்வாறு கோலி கூறினார்.

இதனால் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு விராட் கோலி அவசரம் காட்டமாட்டார் என்று தெரிகிறது. ஆகவே இன்னும் சில போட்டிகளில் கோலி களம் இறங்காமல், உடற்தகுதியை நிரூபிப்பதில் அக்கறை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News