செய்திகள்

ரஞ்சி டிராபி: ஹரியானாவை வீழ்த்தி ஜார்க்கண்ட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2016-12-26 12:33 GMT   |   Update On 2016-12-26 12:33 GMT
ரஞ்சி டிராபியின் 4-வது காலிறுதியில் ஹரியானாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜார்க்கண்ட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. வதோதராவில் நடைபெற்ற 4-வது காலிறுதியில் ஹரியானா - ஜார்க்கண்ட் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஹரியானா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஹரியானா 258 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜார்க்கண்ட் அணி அந்த அணியின் விராட் சிங் (107) சதத்தால் 345 ரன்கள் குவித்தது.

பின்னர் 87 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஹரியானா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியால் 262 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் 175 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜார்க்கண்ட் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் இசான் கிஷான் 86 ரன்கள் விளாச ஜார்க்கண்ட் அணி 30.2 ஓவரிலேயே 5 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஜார்க்கண்ட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே, தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Similar News