செய்திகள்

ரஞ்சி டிராபி காலிறுதி: கர்நாடகாவை எதிர்த்து தமிழ்நாடு விளையாடுகிறது

Published On 2016-12-18 09:52 GMT   |   Update On 2016-12-18 09:52 GMT
ரஞ்சி டிராபி லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் காலிறுதியில் இந்தியா - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2016-17 சீசன் ரஞ்சி டிராபி தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்றது. லீக் ஆட்டங்கள் முடிவில் தமிழ்நாடு, கர்நாடகா, மும்பை, ஐதராபாத், ஜார்க்கண்ட், ஹரியானா, ஒடிசா, குஜராத் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இதில் ஒடிசா முதன்முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

காலிறுதி ஆட்டங்கள் வரும் 23-ந்தேதி தொடங்குகிறது. நான்கு காலிறுதியில் 2-வது காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி கர்நாடகாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. முதல் காலிறுதியில் ஐதராபாத் - மும்பை அணிகள் ராய்ப்பூரிலும், 3-வது காலிறுதியில் குஜராத் - ஒடிசா அணிகள் ஜெய்ப்பூரிலும், 4-வது காலிறுதியில் ஹரியானா - ஜார்க்கண்ட் அணிகள் வதோதராவிலும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அரையிறுதி ஆட்டங்கள் ஜனவரி 1-ந்தேதி ராஜ்கோட் மற்றும் நாக்பூரிலும் நடக்கிறது. இறுதிப் போட்டி ஜனவரி 10-ந்தேதி இந்தூரில் நடக்கிறது.

Similar News