செய்திகள்

3 நாடுகள் கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை எளிதில் வென்றது இலங்கை

Published On 2016-11-15 02:26 IST   |   Update On 2016-11-15 02:26:00 IST
ஜிம்பாப்வே, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஜிம்பாப்வேயில் நேற்று தொடங்கியது. இதில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி எளிதில் வெற்றி பெற்றது.
ஹராரே:

ஜிம்பாப்வே, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஜிம்பாப்வேயில் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இதில் ஹராரேயில் நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே-இலங்கை அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இலங்கை வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியதுடன், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 41.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 154 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பீட்டர் மூர் 47 ரன்னும், கேப்டன் கிரீமெர் ஆட்டம் இழக்காமல் 31 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 24.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

குசல் பெரேரா 21 ரன்னிலும், டிக்வெல்லா 41 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் தனஞ்ஜெய டி சில்வா 78 ரன்னுடனும், குசல் மென்டிஸ் 12 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

Similar News