செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பெரேரா, தரங்கா சதத்தால் இலங்கை அணி 537 ரன்கள் குவிப்பு

Published On 2016-10-30 20:18 IST   |   Update On 2016-10-30 20:18:00 IST
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 537 ரன்கள் குவித்துள்ளது. குசால் பெரேரா, தரங்கா ஆகியோர் சதம் அடித்தனர்.
இலங்கை அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. முதல் போட்டி ஹராரேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர் கருணாரத்னே 56 ரன்னும், கவுசல் சில்வா 94 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் குசால் பெரேரா 110 ரன்கள் குவித்தார். இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது. தரங்கா 13 ரன்னுடனும், டி சில்வா 10 ரன்னுடனும் களத்தில் இருந்தன.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டி சில்வா 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த குணரத்னே 54 ரன்கள் சேர்த்தார். ஒருபுறும் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் உபுல் தரங்கா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவரது சதத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 155 ஓவர்களை சந்தித்து 537 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. உபுல் தரங்கா 110 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே அணியின் கிரிமெர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 1 வி்க்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Similar News