செய்திகள்

நான்கு நாட்கள் டெஸ்ட்: இந்தியா ‘ஏ’ 169 ரன்னில் சுருண்டது- வலுவான நிலையில் ஆஸி. ‘ஏ’

Published On 2016-09-16 17:01 IST   |   Update On 2016-09-16 17:01:00 IST
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான 2-வது நான்கு நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ‘ஏ’ அணி 169 ரன்னில் சுருண்டது. ஆஸி. ‘ஏ’ வலுவான நிலையில் உள்ளது.
இந்திய ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட 2-வது டெஸ்ட் கிரிக்கெட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய ‘ஏ’ அணியின் ஹெர்வாத்கர், பாஸல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பாஸல் ரன்ஏதும் எடுக்காமலும், ஹெர்வாத்கர் 9 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த கருண் நாயர் 1 ரன்னிலும், மணீஷ் பாண்டே ரன் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா ‘ஏ’ அணி 11 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அதன்பின் வந்த ஓஜா 19, சாம்சன் 13, ஜயந்த் யாதவ் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் வந்த ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடினார். இவர் அரைசதம் அடித்து அணியை மீட்க முயற்சி செய்தார். இவர் 79 ரன்கள் எடுத்து முதல்நாள் ஆட்டம் முடியும்வரை அவுட்டாகாமல் இருக்க, இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹர்திக் பாண்டியா நேற்றைய 79 ரன்னுடனும் அவுட்டானதால் இந்தியா முதல் இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி சார்பில் ரிச்சார்ட்சன் 4 விக்கெட்டும், பேர்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன், பேர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் ரன்ஏதும் எடுக்காமலும், பர்ன்ஸ் 3 ரன்களிலும் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா ஏ அணி 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு இணைந்த மேடின்சன், பேட்டர்சன் ஜோடி ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தது. பேட்டர்சன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து மேடின்சன் 81 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்திருந்தது.

5-வது விக்கெட்டுக்கு வெப்ஸ்டெர் உடன் கார்ட்ரைட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் இந்தியாவின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தது. இதனால் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி வலிமையான நிலையை அடைந்துள்ளது. இருவரும் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடினார்கள். வெப்ஸ்டெர் 79 ரன்கள் எடுத்த நிலையில் தாகூர் பந்தில் ஆட்டம் இழந்தார்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 152 ரன்கள் சேர்த்தனர். வெப்ஸ்டெர் அவுட்டானாலும், கார்ட்ரைட் சதத்தை நோக்கி நகர்ந்தார். 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்துள்ளது. கார்ட்ரைட் 99 ரன்னுடனும், வைட்மன் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது ஆஸி. ‘ஏ’ அணி இந்தியா ‘ஏ’ அணியை விட 150 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

Similar News