செய்திகள்

டி.என்.பி.எல்.: திருவள்ளூரை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ்

Published On 2016-09-01 22:15 IST   |   Update On 2016-09-01 22:15:00 IST
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் இன்றைய போட்டியில் திருவள்ளூர் அணியையை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 9-வது லீக் போட்டி இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியின் ஜெகதீசன், கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். திண்டுக்கல் அணியின் ஸ்கோர் 17-வது ஓவரில் 127 ரன்னாக இருக்கும்போது ராஜூ 45 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த சுப்ரமணிய சிவா 1 ரன்னிலும், சன்னி குமார் சிங் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 5-வது வீரராக களம் இறங்கிய விவோக் 6 பந்தில் 16 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர் ஜெகதீசன் அவுட்டாகமல் 69 பந்தில் 87 ரன்கள் குவிக்க திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்திருந்தது.

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருவள்ளூர் அணி களம் இறங்கியது. அந்த அணியின் சஞ்செய் யாதவைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக திருவள்ளூர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களே சேர்த்தது. இதனால் திண்டுக்கல் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்செய் யாதவ் 31 பந்தில் 6 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 53 ரன்கள் குவித்தார்.

திண்டுக்கல் அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், எம். அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. திருவள்ளூர் அணி 2 வெற்றிகளுக்குப் பிறகு முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

Similar News