செய்திகள்
மன்பிரீத் கவுர் குண்டு எறிந்த காட்சி.

தடகளத்தில் இந்தியாவின் தடுமாற்றம் தொடருகிறது

Published On 2016-08-13 09:11 IST   |   Update On 2016-08-13 09:55:00 IST
ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து தகுதி பெற முடியாமல் வெளியேறினார். இதனால் தடகளத்தில் இந்தியாவின் பதக்க கனவு நிறைவேறுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தடகளத்தில் வழக்கம் போல் இந்தியா தடுமாற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. ஆண்களுக்கான வட்டு எறிதலில் கடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான இந்திய வீரர் விகாஸ் கவுடா கலந்து கொண்டதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. 35 பேர் கலந்து கொண்ட இந்த தகுதி சுற்றில் விகாஸ் கவுடா 58.99 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 28-வது இடமே பிடித்து இறுதிபோட்டிக்கு முன்னேறாமல் ஏமாற்றம் அளித்தார்.

இதேபோல் பெண்களுக்கான குண்டு எறிதல் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் அதிகபட்சமாக 17.06 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறினார். 36 பேர் பங்கேற்ற இந்த தகுதி சுற்றில் மன்பிரீத் கவுருக்கு 23-வது இடமே கிடைத்தது.

ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதி சுற்றில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் 1 நிமிடம் 47.27 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து அரைஇறுதி வாய்ப்பை எட்டிப்பிடிக்க முடியாமல் நடையை கட்டினார். 49 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஜின்சன் ஜான்சனுக்கு 25-வது இடம் கிட்டியது.

Similar News