தற்கொலை பட்டியலில் 3-வது இடம் பிடித்த புதுச்சேரி
- ஆண்டு தோறும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
- ஒருவர் தற்கொலை செய்து கொள்வதினால் அவர் குடும்பமும் சமுதாயமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.
புதுச்சேரி:
ஆண்டு தோறும் செப்டம் பர் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலை தொடர்பு மனநல திட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆண்டு தோறும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேசிய குற்றப் பிரிவு அறிக்கைபடி இந்தியாவில் 2017-ல் இருந்து 2022-ல் தற்கொலை விகிதம் அதிகமாகியுள்ளது. இதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளது.
இதற்குப் போதைப்பொருள் பழக்கம், மன அழுத்தம், காதல் தோல்வி, குடும்ப பிரச்சனை போன்ற பல காரணங்கள் உள்ளன. ஒருவர் தற்கொலை செய்து கொள்வதினால் அவர் குடும்பமும் சமுதாயமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.
தற்கொலை தடுப்பு நம் ஒவ்வொருவரிடம் இருந்து ஆரம்பமாகிறது. யாராவது அவர்களது மன கவலைகளையும், விரக்தியையும் நம்மிடையே பகிரும்போது அதற்கு நாம் கவனம் அளித்து அவர்களுக்குச் சரியான ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு உட்படுத்தினாலே போதும்.
யாருக்காவது மனசோர்வு, பதற்றம், பயம், நம்பிக்கையின்மை, விரக்தி, தற்கொலை சிந்தனைகள் இருந்தால் அவர்கள் 24 மணி நேர இலவச மனநல ஆலோசனை தொலைபேசி எண் 14416 அல்லது 18008914416 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.