சின்ன வீராம்பட்டினத்தில் கடலில் குளித்த பெண் உட்பட 3 பேர் ராட்சத அலையில் சிக்கி பலி
- நீண்ட தூரம் செல்லாதவாறு பாதுகாப்பு ஊழியர்கள் கயிறு கட்டியிருந்ததை மீறி சிலர் குளித்தனர்.
- சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
சுதந்திர தினத்தையொட்டி நேற்று முதல் 3 நாட்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலாவுக்கு பலரும் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
புதுச்சேரிக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் பகுதியில் இருந்து சுற்றுலாவுக்கு ஏராளமானோர் வந்துள்ளனர்.
இதனால் கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் இருந்து வருகிறது.
இதைப்போல பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் மேகா (வயது 27) மற்றும் பவன்(25), பிரிட்ஜ்வால்(24), உள்பட சுற்றுலாவுக்கு 12 பேர் புதுச்சேரி வந்தனர்.
புதுச்சேரி பகுதியை சுற்றி பார்த்தவர்கள் இன்று அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு வந்தனர். பிறகு அவர்கள் அங்கு கடலில் இறங்கி குளித்தனர்.
நீண்ட தூரம் செல்லாதவாறு பாதுகாப்பு ஊழியர்கள் கயிறு கட்டியிருந்ததை மீறி சிலர் குளித்தனர். அப்போது ராட்சத அலை எழும்பி வந்ததில் எதிர்பாராதவிதமாக அவர்கள் சிக்கினர்.
இதில் அவர்கள் அலறல் சத்தம் போடவே அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். ஆனால் இதில் மேகா, பவன், பிரிட்ஜ்வால் ஆகியோரை பிணமாகவே மீட்க முடிந்தது.
தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேரைசிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலாவுக்கு வருபவர்கள் கடல் அலையில் சிக்கி பலியாவது வாடிக்கையாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.