இந்தியா

கிரண்

இன்னொருவருடன் பழகியதால் கடத்தி கற்பழிப்பு- காதலனிடம் இருந்து தப்பிக்க நடுரோட்டில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்

Published On 2023-06-26 05:03 GMT   |   Update On 2023-06-26 05:03 GMT
  • ரோட்டில் இளம்பெண் ஒருவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஓடிவந்தார்.
  • திருவனந்தபுரம் போலீசார், ஆற்றிங்கல் சென்று அங்கு பதுங்கி இருந்த கிரணை கைது செய்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணிக்கு பொதுமக்கள் சிலர் டீக்கடைக்கு செல்ல ரோட்டில் நடந்து சென்றனர்.

அப்போது இளம்பெண் ஒருவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஓடிவந்தார். சத்தம் கேட்டு மக்கள் அந்த பெண்ணை நோக்கி ஓடினர். அவர் உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. நிர்வாணமாக இருந்த அவர் கைகளால் உடலை மூடியபடி ரோட்டில் விழுந்து அழுது புரண்டார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், அந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் இருந்து உடை வாங்கி கொடுத்தனர். அதனை அணிந்த பின்பு அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறிய மக்கள், அவர் ஏன்? நிர்வாணமாக ஓடி வந்தார் என கேட்டனர்.

அதற்கு அந்த பெண், திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த கிரண் என்ற வாலிபர், தன்னை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது ஆடைகளையும் கிழித்து எறிந்து விட்டதாகவும் கூறினார். அதிகாலையில் அவர் தூங்கி கொண்டிருந்தபோது தப்பி வந்ததாகவும் கூறினார்.

இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டது. அதன்பின்பு மகளிர் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த கிரண் என்பது தெரியவந்தது.

திருவனந்தபுரம் போலீசார், ஆற்றிங்கல் சென்று அங்கு பதுங்கி இருந்த கிரணை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் கிரண் வேலை பார்த்த நிறுவனத்தில் அந்த பெண்ணும் வேலை பார்த்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்று முன்தினம், அந்த பெண், இன்னொருவருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிரண், அந்த பெண்ணை தன்னோடு வருமாறு அழைத்துள்ளார். முதலில் வரமறுத்த பெண், பின்னர், கிரண் கெஞ்சியதை பார்த்து அவருடன் சென்றுள்ளார். அங்கிருந்து அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்த கிரண், கழக்கூட்டம் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்ததோடு, அவரது ஆடைகளை கிழித்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை செல்போனில் படமும் எடுத்துள்ளார். பின்னர் தன்னை தவிர வேறு யாருடனாவது பேசினால், ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

அன்று இரவு முழுவதும் அந்த பெண்ணை குடோனில் அடைத்து சித்ரவதை செய்த கிரண், அதிகாலை நேரத்தில் தூங்கி உள்ளார். அந்த நேரத்தில் தான் அந்த பெண், குடோனில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளார். விசாரணையில் தெரியவந்த இந்த தகவல்களை தொடர்ந்து போலீசார் கிரணை கைது செய்தனர்.

Tags:    

Similar News