இந்தியா

தம்பியை கார் ஏற்றி கொலை செய்த வாலிபர்- மனைவியை திட்டியதால் ஆத்திரம்

Published On 2022-09-08 15:18 IST   |   Update On 2022-09-08 15:18:00 IST
  • வெங்கடேஸ்வரனுக்கு திருமணமாகி தனது மனைவி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
  • வெங்கடேஸ்வரலுவிடம் அவரது தம்பி தன்னை ஆபாசமாக திட்டியதாக மனைவி புகார் தெரிவித்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு (வயது 34). இவரது தம்பி ஏடு கொண்டலு (32). இருவரும் ஜீப் டிரைவர்களாக வேலை செய்து வந்தனர்.

வெங்கடேஸ்வரனுக்கு திருமணமாகி தனது மனைவி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். ஏடு கொண்டலவுக்கு திருமணம் ஆகாததால் தனது தாய் ரமணம்மாவுடன் வசித்து வந்தார்.

பூர்வீக சொத்து பிரிப்பது சம்பந்தமாக அண்ணன், தம்பி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் வெங்கடேஸ்வரலு வீட்டில் இல்லாத போது நிலம் பிரிப்பது சம்பந்தமாக வெங்கடேஸ்வரலு மனைவிக்கும், அவரது தம்பி ஏடு கொண்டலுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஏடு கொண்டலு ஆபாசமாக திட்டி உள்ளார்.

வீட்டிற்கு வந்த வெங்கடேஸ்வரலுவிடம் அவரது தம்பி தன்னை ஆபாசமாக திட்டியதாக மனைவி புகார் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஸ்வரலு தனது தம்பியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று மாலை வேலை முடித்துவிட்டு டிபிரந்தகம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஏடு கொண்டலு மீது வெங்கடேஸ்வரலு காரை ஏற்றினார்.

இதில் தூக்கி வீசப்பட்ட ஏடு கொண்டலு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏடு கொண்டலுவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வரலூவை கைது செய்தனர்.

Similar News