இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி சிவாவை நிறுத்த திட்டம்?

Published On 2025-08-18 15:11 IST   |   Update On 2025-08-18 15:11:00 IST
  • என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • இன்று மாலை கார்கே வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 21ஆம் தேதியாகும். அன்றைய தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்துவோம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் திமுக மாநிலங்களவை எம்.பி.யான திருச்சி சிவாவை இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்த திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இதனால் அவரை எதிர்த்து மற்றொரு தமிழகத்தைச் சேர்ந்தவரை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் நினைக்கலாம்.

இன்று மாலை டெல்லியில் உள்ள மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்தியா சுட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். அதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது? என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News