இந்தியா

உத்தரகாண்ட் பனிச்சரிவு - பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு

Published On 2022-10-06 20:25 GMT   |   Update On 2022-10-06 20:25 GMT
  • பனிச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர், உள்துறை மந்திரி இரங்கல் தெரிவித்தனர்.
  • பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பனிச்சரிவில் சிக்கிய சிலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்த துயர நிகழ்விற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News