இந்தியா

மன்சுக் மாண்டவியா

முன்னெச்சரிக்கை டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்குவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்- மத்திய அரசு வலியுறுத்தல்

Published On 2022-08-16 12:04 GMT   |   Update On 2022-08-16 12:04 GMT
  • மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை.
  • மத்திய அரசு வழங்கும் நிதியை உரிய நேரத்தில் மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று கலந்துரையாடினார்.

காணொலி வழியே நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவீன் பவார் பங்கேற்றார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், டெல்லி சுகாதார அமைச்சர் மணிஷ் சிசோடியா, புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி உட்பட பல்வேறு மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டனர். 


தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், 15ஆவது நிதி ஆணைய மானியங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா,  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ்கொரோனா தடுப்பூசி வழங்குவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொரோனா பெருந்தொற்று நமக்கு, சுகாதார உள்கட்டமைப்பை ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் வலுப்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துள்ளதாக அவர் கூறினார். நாடு முழுவதும் பல அடுக்கு சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கி வலுப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சையை வழங்குவதில் மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்றும், இதற்காக மத்திய அரசு வழங்கும் நிதியை, சில மாநிலங்கள் குறைந்த அளவில் பயன்படுத்தியிருப்பதாகவும் மன்சுக் கூறினார். மத்திய அரசின் நிதியை மாநிலங்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதார செயல்பாடுகளில் மாநிலங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு மாநில அமைச்சர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி அழைப்பு விடுத்தார். 

Tags:    

Similar News