இந்தியா

விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் கைது

Published On 2023-10-04 07:31 GMT   |   Update On 2023-10-04 07:31 GMT
  • கொச்சி நெடும்பசேரி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
  • 2 பெண்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநில விமான நிலையங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனை சுங்கத்துறையினர் அடிக்கடி கைப்பற்றி தங்கம் கடத்துவோரை கைது செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் கொச்சி நெடும்பசேரி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது கனரக உடமைகள் இல்லாத 2 பெண்கள், கிரீன் சேனல் வழியாக வேகமாக செல்ல முயன்றனர்.

அவர்களை சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். ஆனால் 2 பெண்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் தனியாக அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அந்த பெண் ஆயிரத்து 266 கிராம் எடை உள்ள 4 தங்க கேப்சூல்களை துபாயில் இருந்து கடத்தி வந்துள்ளார். அவரை கைது செய்து தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மலப்புரத்தை சேர்ந்த உமைபா என்ற பெண், தனது உள்ளாடையில் (காமிசோல்) உள்ள அடுக்குகளுக்கு இடையே 763 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் வைத்து தைத்து கடத்தி வந்துள்ளார். அதனையும் சுங்க இலாகாவினர் கைப்பற்றினர். தொடர்ந்து உமைபா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 80 கிராம் தங்க ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News