இந்தியா

திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் 300 கல்யாண உற்சவ லட்டுகளை டெல்லி கொண்டு சென்றாரா?

Published On 2022-06-17 08:37 GMT   |   Update On 2022-06-17 10:36 GMT
  • 300 பெரிய லட்டுக்களை விமானத்தில் எடுத்துச்செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதி வழங்காததால் வேறு விமானத்தின் மூலம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
  • யாருடைய அனுமதியின் பேரில் 300 லட்டுகளை கொண்டு சென்றார். அந்த 300 லட்டுகளை யார் யாருக்கு கொடுத்தார்.

திருப்பதி:

திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி கடந்த மாதம் 25-ந் தேதி டெல்லியில் உள்ள அதிகாரிகளை சந்திக்க சென்றார்.

அப்போது திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ரூ.200 விலை உள்ள 300 கல்யாண உற்சவ பெரிய லட்டுகளை டெல்லிக்கு கொண்டு சென்று அதிகாரிகளுக்கு கொடுத்ததாகவும், தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள இவ்வாறு செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

300 பெரிய லட்டுக்களை விமானத்தில் எடுத்துச்செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதி வழங்காததால் வேறு விமானத்தின் மூலம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதில் யாருடைய அனுமதியின் பேரில் 300 லட்டுகளை கொண்டு சென்றார். அந்த 300 லட்டுகளை யார் யாருக்கு கொடுத்தார். அதற்குண்டான பணத்தை யார் தேவஸ்தானத்திற்கு செலுத்துவது என்பன போன்ற கேள்விகளை கேட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு இருந்தது. ஆந்திரா முழுவதும் இந்த தகவல் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறுகையில்:-

ஆந்திர முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த தகவலின் பேரில் 30 கல்யாண உற்சவ லட்டுகளை மட்டுமே டெல்லிக்கு கொண்டு சென்று மரியாதை நிமித்தமாக பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு கொடுத்ததாகவும், 300 லட்டுக்கள் கொண்டு செல்லவில்லை எனவும் பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து திருமலை 1 டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News