ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக டாக்டர் படுகொலை: பாதி எரிந்தநிலையில் உடல் மீட்பு
- எம்.பி.பி.எஸ். முடித்து உள்ள டாக்டர் மதன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
- கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார்.
ராஞ்சி:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு மதன்குமார் (வயது 28) என்கிற மகனும், ஜனனிஸ்ரீ (24) என்கிற மகளும் இருந்தனர். ஜனனிஸ்ரீ தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.
எம்.பி.பி.எஸ். முடித்து உள்ள டாக்டர் மதன்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
அவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக்கல்லூரியில் தடயவியல் மருத்துவ மேற்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார். இந்தநிலையில் திடீரென அவர் மாயமானார்.
சக மாணவர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொடூரமாக கொலை செய்த மர்மநபர்கள், அவரது உடலை தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் பாதி எரிந்த உடலை கீழே தூக்கி போட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் வந்து விழுந்து கிடந்தது. சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மேலும் கொலை நடந்த விடுதியை சோதனை செய்த போலீசார், அங்கிருந்து செல்போன் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சில கைரேகைகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
இதுதவிர சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே டாக்டர் மதன்குமார் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மதன்குமார் இறந்த தகவல் நாமக்கல் அருகே புத்தூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். உடனடியாக டாக்டரின் உடலை வாங்க விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டு சென்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மருத்துவக்கல்லூரிக்கு மேற்படிப்பு படிக்க சென்ற டாக்டர் ஒருவர் விடுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.