இந்தியா

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்... செப்டம்பர் மாத ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

Published On 2022-06-27 03:13 GMT   |   Update On 2022-06-27 03:13 GMT
  • பக்தர்கள் வழக்கம்போல் இன்று மாலை 4 மணி முதல் 29ம் தேதிவரை ஆன்லைனின் முன்பதிவு செய்யலாம்.
  • சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யாததால் தற்போது ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இதனால் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காப்பி உள்ளிட்டவைகளை இலவசமாக அதிகாரிகள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கி வருகின்றனர்.

ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்த நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் (ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்) இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் வழக்கம்போல் இன்று மாலை 4 மணி முதல் 29ம் தேதிவரை ஆன்லைனின் முன்பதிவு செய்யலாம். மொத்தம் உள்ள 46470 ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் 8070 டிக்கெட்டுகள் குலுக்கல் முறை தேர்வுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 38400 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவுக்காக ஒதுக்கப்படுகிறது.

சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு, அதுபற்றிய தகவல் அவர்களுடைய செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News