காங்கிரஸ் எதிர்காலம் ஜீரோ - பிரனாப் முகர்ஜி மகள் கடும் விமர்சனம்
- இந்த விவகாரத்தில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
- அவர்களால் 40 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது.
காங்கிரஸ் கட்சியில் இருந்தவரும், முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியின் மகளுமான சர்மிஸ்தா முகர்ஜி ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தன்னை கேலி செய்வதாகவும், வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கேவலமான மொழியை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கடிதத்தில், "இந்த விவகாரத்தை ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஷிரிண்டே மற்றும் உங்களையும் டேக் செய்து உங்களது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன். எனினும், இந்த கடிதத்தை எழுதும் வரையில், இது தொடர்பாக எனக்கு எந்த தகவலோ அல்லது, நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. ஒரு பெண்ணாக இந்த விவகாரத்தில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்."
"தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பூஜ்ஜியமாகவே தெரிகிறது. அவர்களது சொந்த இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜியே அவர்களால் (காங்கிரஸ்) 40 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என கூறுகிறார்."
"எனது கருத்தின்படி, ராகுல் காந்தி அல்லது அவரின் குடும்பத்தாரே காங்கிரஸ்-இன் முகமாக செயல்பட்டால் காங்கிரஸ்-க்கு எதிர்காலமே கிடையாது. அவர்களுக்கு புதிய முகம் தேவை, புதிய யோசனைகள் மற்றும் தலைமை இல்லாமல் எதுவுமே சாத்தியமாகாது," என தெரிவித்துள்ளார்.