இந்தியா

கிரிமினல் அவதூறு சட்டத்தை நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து

Published On 2025-09-23 05:00 IST   |   Update On 2025-09-23 05:00:00 IST
  • ஜே.என்.யூ-வை "பாலியல் ஒழுங்கீனத்தின் கூடாரம்" என்று சித்தரிக்கும் ஆவணத்தைத் தயாரித்ததாகக் கூறப்பட்டது.
  • பெரும்பாலான நாடுகளில் அவதூறு ஒரு சிவில் வழக்காக மட்டுமே உள்ளது.

நாட்டில் கிரிமினல் அவதூறு சட்டத்தை நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2016-ல் 'தி வயர்' செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரை தொடர்பாக ஜே.என்.யூ பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் அமிதா சிங் அந்த பத்திரிகை மற்றும் அதன் ஆசிரியர்கள் மீது 2017 இல் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அந்த கட்டுரையில், அமிதா சிங் ஒரு குழுவை வழிநடத்தி, ஜே.என்.யூ-வை "பாலியல் ஒழுங்கீனத்தின் கூடாரம்" என்று சித்தரிக்கும் ஆவணத்தைத் தயாரித்ததாகக் கூறப்பட்டது.

இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வரும் நிலையில் உயர்நீதிமன்றம் பலமுறை தி வயருக்கு சம்மன் அனுப்பியது. இந்த வழக்கு இப்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி சுந்தரேஷ், "இந்த வழக்கு தொடர்பாக, நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. இவ்வளவு காலம் இந்த வழக்கை இழுத்துக்கொண்டே இருக்க வேண்டுமா? என்று  கேள்வி எழுப்பினார்.

மேலும், "கிரிமினல் அவதூறு சட்டங்களை நீக்கும் நேரம் வந்துவிட்டது" என்றும் அதுகுறித்து பரிசீலித்து வருவதாகவும் நீதிபதி  வாய்மொழியாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் அவதூறு என்பது சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் கிரிமினல் குற்றமாக (criminal offence) கருதப்படுகிறது.

ஆனால் பெரும்பாலான நாடுகளில் அவதூறு ஒரு சிவில் வழக்காக மட்டுமே உள்ளது. அவதூறு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அபராதம் மட்டுமே விதிக்கப்படும், சிறைத் தண்டனை இருக்காது.

இந்த சூழலில் உச்சநீதிமன்றத்தின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.   

Tags:    

Similar News