இந்தியா

வெள்ளத்தால் சுடுகாட்டுக்கு கொண்டுச்செல்ல முடியவில்லை- சாலையில் தகனம் செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகியின் உடல்

Published On 2023-07-10 11:10 GMT   |   Update On 2023-07-10 11:10 GMT
  • பாலத்தின் மேல் பகுதியில் நின்று அவரது உடலை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
  • சர்வீஸ் சாலையில் வைத்தே குஜூன்மோனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சக்குளத்துகாவு பகுதியை சேர்ந்தவர் குஜூன்மோன்(வயது72). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் அப்பகுதியில் பூத் தலைவராக உள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடும் மூச்சு திணறலால் அவதிப்பட்ட குஜூன்மோனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

அவரை அவரது உறவினர்கள் நீரில் மூழ்கிய பகுதி வழியாக சிரமப்பட்டு கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை இறுதிச்சடங்கிற்கு எடுத்துச் செல்வதிலும் வெள்ளம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டது.

ஆகவே அவரது உடல் புஸ்பகிரி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. ஆனால் வெள்ளம் வடியாததால் அவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஆகவே அவரது இறுதி சடங்கை வெள்ளம் இல்லாத பொது இடத்தில் வைத்து நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து குஜூன்மோனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள சர்வீஸ் சாலைக்கு கொண்டு வரப்பட்டது. பாலத்தின் மேல் பகுதியில் நின்று அவரது உடலை பொதுமக்கள் பார்வையிட்டனர். பின்பு சர்வீஸ் சாலையில் வைத்தே குஜூன்மோனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அவரது மகன் சுனில்குமார் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதய நோயால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News