இந்தியா

இந்திய வரலாற்றில் வெற்றிகரமான பிரதமர் மோடி - முகேஷ் அம்பானி

Published On 2024-01-10 12:46 IST   |   Update On 2024-01-10 12:58:00 IST
  • உலகின் மிகவும் மதிப்பு மிக்க முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இதுவாகும்.
  • ரிலையன்ஸ் ஒரு குஜராத்தி நிறுவனமாக இருந்தது. எப்போதும் அது இருக்கும்.

காந்திநகர்:

குஜராத் தலைநகர் காந்தி நகரில் 10-வது சர்வதேச வர்த்தக உச்சி மாநாடு இன்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத், செக் குடியரசு பிரதமர் பீட்டர் பியாலா, மொசாம்பிக் அதிபர் பிலிப், குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ் வரத், முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:-

உலகின் மிகவும் மதிப்பு மிக்க முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இதுவாகும். குஜராத் நவீன இந்தியாவின் வளர்ச்சியின் நுழைவு வாயிலாகும். வெளிநாட்டினர் புதிய இந்தியாவை நினைக்கும்போது அவர்கள் குஜராத்தை நினைக்கிறார்கள். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது.

நமது காலத்தின் மிகப் பெரிய உலக தலைவராக உருவெடுத்த தலைவரால் இது முடிந்தது. இந்திய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

ரிலையன்ஸ் ஒரு குஜராத்தி நிறுவனமாக இருந்தது. எப்போதும் அது இருக்கும். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் குஜராத்தில் ஜிகா தொழிற்சாலை தொடங்க தயாராக உள்ளோம்.

2047-ல் குஜராத் மட்டும் 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும். 2047-க்குள் இந்தியா 35 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உச்சி மாநாட்டில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி பேசியதாவது:-

குஜராத்தில் 2025 வரை ரூ.55 ஆயிரம் கோடியும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேலும் முதலீடு செய்யப்படும். இந்தியாவை ஒரு முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் பாதையில் செல்கிறது. பிரதமர் மோடி இந்தியா ஒரு பெரிய சக்தியாக உலக வரைப்படத்தில் வெற்றிகரமாக இணைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News