இந்தியா

அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட 5 ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published On 2022-10-01 11:50 IST   |   Update On 2022-10-01 11:50:00 IST
  • டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய கைப்பேசி மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார்.
  • 5 ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த 2018 முதல் ஐ.ஐ.டி.கள், பெங்களூர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் நிறுவனமான 'சமீர்' போன்றவற்றின் தீவிர ஆய்வுக்கு பிறகு 5 ஜி சேவையை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது புழக்கத்தில் உள்ள 4 ஜி சேவையை விட பல மடங்கு வேகத்தை 5ஜி வழங்குகிறது. பின்னடைவு இல்லாத இணைப்பையும், நிகழ் நேரத்தில் தரவை பகிரும் உயர் தரவு விகிதம், கோடிக்கணக்கில் இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்கும் ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் உள்ளிட்டவை நெட்வொர்க் செயல் திறனை அதிகரிக்க செய்யும்.

5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோட போன்-ஐடியா போன்ற நிறுவனங்களோடு அதானியின் நிறுவனம் சுமார் 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலை வரிசையில் 5 ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.

5 ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இந்தநிலையில் அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய கைப்பேசி மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். அப்போது தொலை தொடர்பின் திருப்புமுனையாக இருக்கும் 5 ஜி சேவையையும் மோடி அறிமுகப்படுத்தினார்.

5 ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும். இந்த சேவையின் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார தாக்கம் 2035 ஆண்டில் சுமார் ரூ.35 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News