இந்தியா

ஆன்லைனில் நவீன முறையில் சேவல் சண்டை நடத்த திட்டம்- ரூ.1000 கோடி வரை பந்தயம் கட்ட ஏற்பாடு

Published On 2023-01-04 05:35 GMT   |   Update On 2023-01-04 05:35 GMT
  • ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த மாநில அரசு தடை விதித்து உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
  • ஆந்திர மாநிலத்தில் கடலோர பகுதிகளான கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் சேவல் சண்டை புகழ் பெற்றவை.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் சேவல் சண்டை பிரபலமான ஒரு விளையாட்டாக நடத்தி வருகின்றனர். இதற்காக வீரியமிக்க சேவல் குஞ்சுகளை வாங்கி வந்து பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட தரமான உணவு அளித்து சண்டை பயிற்சி அளிக்கின்றனர். சுமார் ஐந்து அடி உயரம் வரை வளர்க்கப்படும் இந்த சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு மற்றொரு சேவலுடன் மோத விடுகின்றனர்.

சேவல்கள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷத்துடன் உயரே பறந்து சண்டையிடும் காட்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவார்கள். சேவல் சண்டை ஆர்வம் உள்ளவர்கள் சண்டையிடும் சேவல்கள் மீது ரூ.1000 முதல் ஒரு லட்சம் வரை பந்தயம் கட்டுவது வழக்கம். பந்தயம் கட்டியவர்களின் சேவல் வெற்றி பெற்றால் 3 மடங்காக பணம் திருப்பி தரப்படும்.

இந்த நிலையில் ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த மாநில அரசு தடை விதித்து உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சேவல் சண்டை அமைப்பாளர்கள் சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகை அன்று சேவல் சண்டைகளை புத்திசாலித்தனமாக ஆன்லைனில் நடத்த திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக ஜிஇ 5 கி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சேவல் சண்டை அமைப்பாளர்கள் வட இந்திய சந்தையை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் கடலோர பகுதிகளான கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் சேவல் சண்டை புகழ் பெற்றவை. அமைப்பாளர்கள் மெசேஜிங், ஆப்ஸ், லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் பேமெண்ட் போர்டல்களுக்கு மாறி உள்ளனர்.

தற்போது சேவல் சண்டை சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றனர் சண்டையை தொடங்குவதற்கு முன்பு சேவல்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவிடப்படுகின்றன. சூதாட்டத்தில் ஆர்வமுள்ளவர்களை கொண்டு ரகசிய குழுக்களை உருவாக்குகிறார்கள். சூதாட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது பாஸ்வேர்ட் எண்களை சேவலின் பெயர்களுக்கு எதிராக பதிவிடப்படுகிறது.

உங்களது பதிவு சரி என வந்த பிறகு அமைப்பாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்வது மூலம் சேவல் சண்டையில் சூதாட்டம் நடக்கிறது. வெற்றி பெற்ற சேவல்கள் மீது ஆன்லைனில் பந்தயம் கட்டியவர்களுக்கு அமைப்பாளர்களின் கமிஷன் பிடித்துக் கொண்டு பணம் கட்டியவர்களின் வங்கிக் கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

சேவல் சண்டைக்கு ரூ.1000 கோடி வரை பந்தயம் கட்ட ஏற்பாடு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News