இந்தியா

மாணவியை காதலிப்பதில் தகராறு: தேர்வு அறையில் 9-ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய சக மாணவன்

Published On 2023-04-21 05:05 GMT   |   Update On 2023-04-21 05:05 GMT
  • தேர்வு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
  • திடீரென ஆவேசமடைந்த உதயசங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை சரமாரியாக வெட்டினார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், ராஜமகேந்திராவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சாய் பிரசாத்(வயது14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் உதயசங்கர் என்ற மாணவரும் படித்து வருகிறார்.

மாணவர்கள் 2 பேரும் தங்களுடன் படிக்கும் ஒரு மாணவியை காதலித்தனர்.

இதனால் ஸ்ரீஹரி சாய் பிரசாத்துக்கும் உதயசங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றுடன் தேர்வு நிறைவடைவதால் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உதயசங்கர் வீட்டில் இருந்த கத்தியை மறைத்து எடுத்து வந்தார்.

தேர்வு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். திடீரென ஆவேசமடைந்த உதயசங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீஹரி சாய் பிரசாத் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட ஆசிரியரும் சக மாணவர்களும் உதயசங்கரை தடுத்து நிறுத்தினர்.

காயமடைந்த ஸ்ரீஹரி சாய் பிரசாத் சிகிச்சைக்காக ராஜாநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக ராஜமகேந்திராவரத்துக்கு மாற்றப்பட்டார்.

மாணவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News