இந்தியா

திருப்பதி பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த சிறுத்தை- மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்

Published On 2022-12-20 11:33 IST   |   Update On 2022-12-20 11:33:00 IST
  • திருப்பதி அலிப்பிரி அருகே மலை அடிவாரத்தில் வன உயிரியல் பூங்கா அருகே ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளது.
  • வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று அங்குள்ள மரத்தின் மீது ஏறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது.

திருப்பதி:

திருப்பதி அலிப்பிரி அருகே மலை அடிவாரத்தில் வன உயிரியல் பூங்கா அருகே ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பல்கலைக்கழகம் அமைந்துள்ளதால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் அடிக்கடி பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து விடுகின்றன.

இதனை தடுப்பதற்காக 8 அடி உயரத்தில் பல்கலைக்கழகத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று அங்குள்ள மரத்தின் மீது ஏறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது.

அப்போது வளாகத்தில் படுத்திருந்த நாயை சிறுத்தை அடித்து கொன்றது. நாய் குரைக்கும் சத்தத்தை கேட்ட காவலாளி வந்து பார்த்து கத்தி கூச்சலிட்டர்.

காவலாளியின் சத்தத்தை கேட்டு விடுதியில் இருந்த மாணவர்களும் ஓடி வந்தனர். சிறுத்தையை பார்த்து சில மாணவர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர்.

அதற்குள் வளாகத்தில் இருந்த சிறுத்தை அங்கு இருந்த மரத்தின் மீது ஏறி வெளியே குதித்து தப்பி சென்றது. சிறுத்தை வந்ததால் மாணவர்கள் பீதியில் உறைந்தனர். கதவு, ஜன்னலை பூட்டி அறைக்குள் பதுங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.

மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மாணவர்கள் யாரும் இரவு 7 மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

Similar News