இந்தியா

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.19 கோடி அபராதம்

Published On 2023-03-28 06:08 GMT   |   Update On 2023-03-28 06:08 GMT
  • திருப்பதி தேவஸ்தானம் லைசென்ஸ் புதுப்பித்தலில் கவனம் செலுத்தவில்லை.
  • மத்திய உள்துறையின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துறை 2019-ல் கண்டுபிடித்தது.

திருப்பதி:

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக உள்நாட்டு பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வாழும் பக்தர்களும் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.

தரிசனத்திற்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் உண்டியலில் நகை, அந்தந்த நாட்டு கரன்சி நோட்டுகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். நேரடியாக தரிசனத்திற்கு வர முடியாத பக்தர்கள் தங்களது நாட்டு கரன்சி நோட்டுகளை ஆன்லைனில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இவ்வாறு வெளிநாட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறுவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாடு சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) கீழ் பெற்ற உரிமத்தை திருப்பதி தேவஸ்தானம் புதுப்பிக்காத காரணத்தால், மத்திய உள்துறை அமைச்சகம் ரூ. 3.19 கோடியை அபராதமாக விதித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷின் ட்வீட் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. உரிமம் புதுப்பிக்கப்படாததால் இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாடுகளில் இருந்து வந்த கரன்சி நோட்டு பரிமாற்றத்திற்கு உடன்படவில்லை.

ஏழுமலையான் கோவில் உண்டியலில் பணம் அல்லது விலைமதிப்பற்ற தங்கம், வைரம் மற்றும் பிற பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவதை கணக்கு காட்ட வேண்டியதில்லை. பெரும்பாலும் பெயர் தெரியாத பக்தர்களால் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது.

அதே சமயம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருமலைக்கு வந்து தரிசனத்திற்குப் பிறகு உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர்.

அவற்றில் அந்தந்த நாடுகளின் கரன்சியும் அடங்கும். முன்னதாக அந்த வெளிநாட்டு பணம் ரிசர்வ் வங்கி மூலம் தேவஸ்தானத்திற்கு நமது நாட்டு பணமாக மாற்றப்பட்டது. 2018-க்குப் பிறகு இதுபோன்ற பண மாற்றத்தை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை. தவிர, தேவஸ்தான கணக்கில் வெளிநாட்டு கரன்சிகளை டெபாசிட் செய்ய எஸ்.பி.ஐ வங்கி ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் ரூ.30 கோடி வெளிநாட்டுப் பணம் தேவஸ்தான கணக்கில் டெபாசிட் செய்யப்படாமல், எஸ்பிஐ வங்கியில் கிடக்கிறது.

வெளிநாட்டு பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்க மத்திய உள்துறையிடம் இருந்து வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தேவஸ்தானம் உரிமம் பெற்றுள்ளது.

அதன் காரணமாக 2018-ம் ஆண்டு வரை அந்நியச் செலாவணி மாற்றத்தை ரிசர்வ் வங்கி அனுமதித்தது. தேவஸ்தான கணக்கில் வெளிநாட்டு பணத்தை டெபாசிட் செய்வதையும் எஸ்பிஐ பயன்படுத்தியது. உரிமம் 2018-ல் காலாவதியானது.

திருப்பதி தேவஸ்தானம் லைசென்ஸ் புதுப்பித்தலில் கவனம் செலுத்தவில்லை. மத்திய உள்துறையின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துறை இதை 2019-ல் கண்டுபிடித்தது.

உரிமம் இல்லாமல் வெளிநாட்டு நன்கொடை வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து தேவஸ்தானத்திற்கு ரூ.1.14 கோடி அபராதம் விதித்துள்ளது.

2020-ல் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, வெளிநாட்டு நன்கொடைகளில் கிடைக்கும் வட்டியை அந்தந்த நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது.

இதனால் திருப்பதி தேவஸ்தானம் வட்டியை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. வருமான விவரங்களை சரியானபடி வழங்காததற்காக தேவஸ்தானத்திற்கு ரூ.3.19 கோடி அபராதம் விதித்தது.

இதன் மூலம் அபராதத் தொகை ரூ.4.33 கோடியை எட்டியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு அபராதம் விதித்துள்ளதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்து தர்மத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரசாரம் செய்யும் இந்து அறநிலைய அமைப்பான தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்ததற்காக மத்திய பாஜக அரசை அவர் குற்றம் சாட்டினார்.

இது அரசியல் சர்ச்சையாக மாறி வருகிறது. தேவஸ்தானம் ஏன் சரியான நேரத்தில் புதுப்பிக்கவில்லை? அதாவது தற்போதைய அதிகாரிகளோ, அதிகார வர்க்கமோ சரியான பதில் சொல்வதில்லை.

உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியதைத் தவிர, மீடியாக்கள் மூலம் பக்தர்களுக்கு விவரம் தெரிவிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படாததால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகிறது.

வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளை தேவஸ்தானம் பின்பற்றாதது மற்றும் மத்திய உள்துறையின் வழிகாட்டுதலின்படி வருமான விவரங்களை சரியானபடி சமர்ப்பிக்காதது தான் அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணம் என்பது தெளிவாகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் உண்டியல் மூலம் சுமார் ரூ.30 கோடி அந்நியச் செலாவணி கிடைத்துள்ளது.

Tags:    

Similar News